இலங்கைக்கு கேபினட் ஒப்புதலின்றி அமைதிப் படையை அனுப்பினார் ராஜிவ் காந்தி: நட்வர்சிங்
டெல்லி: இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
ஹெட்லைன்ஸ்ட் டுடே தொலைக்காட்சிக்கு நட்வர்சிங் அளித்த பேட்டியில் இலங்கை பிரச்சனை குறித்து கூறியிருப்பதாவது:
அமைதிப் படை ஏன்?
இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே தமக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக ராஜிவிடம் கூறினார். இதனால் இந்திய அமைதிப்படையை அனுப்பி வைக்குமாறு ஜெயவர்த்தனே கேட்டுக் கொண்டார். உடனே ராஜிவ் காந்தியும் அமைதிப் படையை அனுப்ப ஒப்புக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலம்..
ராஜிவ் காந்தியும் சரி.. அவரது அமைச்சரவை சகாக்களும் சரி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலம் போடும் முன்பாக ஜெயவர்த்தனேவிடமும் ஐ.நா.வில் உள்ள இந்திய பிரதிநிதியிடமும் தெரிவிக்கவில்லையே என்பதைப் பற்றியெல்லாம் உணரவில்லை. சர்வ சாதாரணமாக உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் போட்டனர்.
தவறாகப் போனது..
ராஜிவ் காலத்தில் இலங்கை பிரச்சனை தொடக்கம் முதலே தவறாக கையாளப்பட்டது. கடைசியில் அது தோல்வியைத்தான் சந்தித்தது.
சீனாவில் ராஜிவ்
ராஜிவ் காந்தி அப்போது சீனாவுக்கு சென்று அந்நாட்டு தலைவர் டெங் ஜியோபிங்கை சந்தித்தார். ஆனால் சீனாவுக்கான இந்திய தூதரையோ, வெளியுறவுத் துறை செயலர் கே.பி.எஸ். மேனனையோ அழைத்துச் செல்ல ராஜிவ் மறந்துவிட்டார். பின்னர் இது பற்றி மேனனிடம் ராஜிவ் மன்னிப்பு கோரினார்.
ராஜிவை சுற்றிய வளையம்
ராஜிவ் தமது ஆட்சிக் காலத்தில் கோபி அரோரா மற்றும் அருண் நேரு உள்ளிட்டோர்தான் அதிகார மையங்களாக இருந்தனர்.
இவ்வாறு நட்வர்சிங் கூறியுள்ளார்.