விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கடலில் விழுந்து விபத்து
திருவனந்தபுரம்: இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா ரோந்து விமானம் கொச்சி அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று இன்று மாலை கொச்சி கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில் நுட்ப காரணமாக இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கொச்சியில் இருந்து 9 மைல் தூரத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் இன்று மாலை 7.30 மணிக்கு விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் நடைபெற்று வருகிறது என்றனர். இதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆளில்லா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சென்ற ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் திடீரென மாயமானது.விமானம் காணாமல் போய் ஐந்து நாள்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.