அன்று "சிரிப்பு".. இன்று "சிலிர்ப்பு".. நாடாளுமன்றத்தை கலக்கும் நவநீதகிருஷ்ணன்!
நாடாளுமன்றத்தில் பாட்டு பாடி மகிழ்வித்த நவநீதகிருஷ்ணன் இன்று தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி சிலிர்க்க வைத்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் அன்று பாட்டு பாடி மகிழ்வித்த நவநீதகிருஷ்ணன் இன்று தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசோ அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக கர்நாடக மாநில மக்களை எப்படி திருப்திப்படுத்துவது என்பதில்தான் குறியாக உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன.
தற்கொலை செய்வோம்
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக திட்டம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. 6 வாரங்களாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திவிட்டு இன்று நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்வோம் என்று ஒரு ஸ்டன்ட் அடிக்கிறார்.
ஜகா வாங்கினார்
தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு நாடகம் நடத்த மற்ற அதிமுக எம்பிக்களிடம் தற்கொலை விவகாரத்தை கலந்து பேசவில்லை என்பது திருச்சி எம்பி குமார், தற்கொலை செய்து கொள்வது என்பது தனிப்பட்ட கருத்து என்று கூறியதிலேயே தெரிகிறது. இந்த டிராமாவை பார்க்கும் போது ஆட்டை கேட்காமல் கசாப்பு கடைக்காரர் வெட்டுவதை போன்று உள்ளது.
பொறுப்பின்மை
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ராஜினாமா செய்தோ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோ காரியத்தை சாதிக்காமல் நாங்கள் ராஜினாமா செய்யமாட்டோம், தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதகிருஷ்ணன் கூறுவதால் யாருக்கு என்ன பயன். காவிரி விவகாரத்தை 6 வாரங்களாக ஆக்கப்பூர்வமாக எப்படி கையாள்வது என்பதை கண்டறியாமல் நாங்களும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி விட்டு இறுதியில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறுவது பொறுப்பற்ற செயலாகும்.
சிரிக்க வைத்தார்
முன்பு ராஜ்யசபாவில் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்று பாட்டு பாடி அனைவரையும் சிரிக்க வைத்தார். ஆனால் இன்று தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி முதிர்ச்சியவற்றவர் போல பேசியுள்ளார். பதவியை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுப்பதை விட்டு விட்டு, உயிரை விட பதவி தான் முக்கியம் என்று மறைமுகமாக கூறி நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் மானத்தை கப்பல் ஏற்றிவிட்டார். இனியாவது இதுபோன்ற யாருக்கும் பயன்படாத வெட்டி பேச்சுகளை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் நவநீதகிருஷ்ணன் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.