கிரிக்கெட், வர்ணனை, டிவி ஷோ, அமைச்சர்.. ஆல்-ரவுண்டராக கலக்கும் நவ்ஜோத்சிங் சித்து
சண்டீகர்: கிரிக்கெட் உலகில் பிரபலமான நவ்ஜோத்சிங் சித்து, தற்போது பஞ்சாப் அமைச்சரவையில் அமைச்சராகியுள்ளார். கடைசி நேரத்தில் எடுத்த ஒரு முடிவு அவரை அதிகாரமிக்க ஒரு பதவிக்கு கொண்டு வந்துள்ளது.
54 வயதாகும் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர். 1981-82ல் முதல்தர கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அவரின் வயது 19. 1983-84ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக களம் கண்ட இவருக்கு, பிறகு சில வருடங்கள் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆனால், 1987ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டின்போது, 4 அரை சதங்கள் விளாசி, அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக மாறிப்போனார்.
சிக்சர் சித்து
மொத்தம் 51 டெஸ்ட் போட்டிகளிலும், 131 ஒருநாள் போட்டிகளிலும் ஆடிய சித்து, அக்காலகட்டங்களில் சிக்சர் சித்து என புகழப்பெற்றார். அந்த காலகட்டத்தில் சிக்சர்கள் அடிப்பது அபூர்மாக இருந்தது. ஆனால் சித்து, பிட்சை விட்டு இறங்கி வந்து சிக்சர் விளாசுவதை ஒரு ஃபேஷனாக செய்தவர். அவரது துணிச்சலால் இந்த செல்ல பெயர் கிட்டியது.
வர்ணனை
சித்து தனது வேகத்தை கிரிக்கெட்டோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் டெலிவிஷன் சேனல்களில் வர்ணனையாளராக பட்டையை கிளப்பினார். சமீப காலமாக தி கபில் ஷோ எனப்படும் ஹிந்தி காமெடி ஷோவில் பங்கேற்றதால், சித்து புகழ் மேலும் பலப்பட்டுள்ளது. இந்த டிவி நிகழ்ச்சி டி.ஆர்.பியில் டாப்பிலுள்ளது. இதனால் வட இந்தியர்களின் வீடுகள்தோறும் அறிமுகமானார் சித்து.
பாஜகவில் அரசியல் கற்றார்
அரசியல் பிரவேசத்தை பொறுத்தளவில், 2004ல் பாஜகவில் இணைந்து, பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2016ல் சித்து, ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். ஆனாலும், அதே வருடம் பாஜகவிலிருந்து பிரிந்துவிட்டார் சித்து. ஆம் ஆத்மி கதவை தட்டினார். கேஜ்ரிவாலுடன் இவருக்கு நல்லெண்ணம் ஏற்படவில்லை. 2017ல் காங்கிரசில் இணைந்தார். உடனேயே அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டது. வெற்றி பெற்ற சித்து இன்று அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
அரசியல் குடும்பம்
நவ்ஜோத்சிங் சித்துவிற்கு நவ்ஜோத் கவுர் சித்து என்ற மனைவியும், கரண் சித்து என்ற மகன் மற்றும் ராபியா சித்து என்ற மகள் உள்ளனர். சித்து மனைவி நவ்ஜோத் கவுருக்கும் பாஜக ரத்தின கம்பளம் விரித்தே வரவேற்பு கொடுத்திருந்தது. அமிருதசரஸ் கிழக்கு தொகுதியிலிருந்து கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் கவுர். கணவர் பாஜகவை விட்டு விலகியதால் அவரும் கட்சியை விட்டு தள்ளிப்போய்விட்டார்.