முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரஸில் இணைந்தார்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக எம்.பி.யாக இருந்தவர் நவ்ஜோத்சிங் சித்து. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவர் திடீரென பாஜகவில் இருந்து விலகி எம்பி பதவியை ராஜினமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து சித்து எந்த கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதேநேரத்தில் சித்து தனிக்கட்சி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. சித்துவின் இந்த தனிக்கட்சி முயற்சி வெற்றி பெறவில்லை.
இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சித்து சந்தித்து பேசினார்.
தற்போது பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் சித்து முறைப்படி இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் சித்து காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.