பஞ்சாப்பிலும் காங்.க்கு அதிர்ச்சி.. முதல்வருடன் மோதல்.. அமைச்சர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா
அமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இவர் பஞ்சாபில் கடந்த முறை சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்பிறகு பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
பஞ்சாப் அரசில் சித்துவுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மின்சார துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால் இன்று வரை அவர் அமைச்சர் பதவியை ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் வேதனை அடைந்த சித்துவுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
My letter to the Congress President Shri. Rahul Gandhi Ji, submitted on 10 June 2019. pic.twitter.com/WS3yYwmnPl
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 14, 2019
இதனால் விரக்தி அடைந்த சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினிமா செய்தார். கடந்த 10ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த சித்து அந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுப்பிவிட்டார். அந்த கடிதத்தின் நகரை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சித்து வெளியிட்டு, தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் மின்சார தேவை இருக்கும் இந்த சூழலில் சித்து அமைச்சர் பதவியில் இருந்திருக்கலாம் என்கிறார்கள். நெல் உள்ளிட்ட தண்ணீர் அதிகம் சார்ந்த பயிர்களுக்கு பருவ மழை பொயத்ததால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த துறையை கவனிக்க வேண்டிய சித்து அமைச்சர் பதவியை ஏற்காததால் முதல்வர் அம்ரீந்தர் சிங்கே மின்சார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.