சிஆர்பிஎப் வீரர்கள் மீது யாரோ தாக்குதல் நடத்தினாங்க… சர்ச்சையில் சிக்கிய நவ்ஜோத் சித்து
சண்டிகர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது யாரோ சிலர் தாக்குதல் நடத்தியதற்கு, ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் பழிக்கலாமா என்று அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளது... சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் பிப்ரவரி 14ம் தேதி பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 45 பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதற்கிடையே, வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந் நிலையில், சண்டிகரில் செய்தியாளர்களுக்கு கிரிக்கெட் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:புல்வாமாவில் நமது பாதுகாப்புப்படையினர் மீது யாரோ சிலர் நடத்திய தாக்குதலுக்கு, ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் பழிக்கலாமா? என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சிறந்த நட்பு கொண்டவரான சித்து, அவரின் பதவியேற்பு விழாவுக்கு சென்றார். அந்நாட்டின் ராணுவத் தளபதியை கட்டியணைத்து நட்பு பாராட்டினார். அப்போது அந்த நிகழ்வு பெரும் சர்சசையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.