பாஜகவில் அவமானம்.. காங்கிரஸில் சேர்ந்து பஞ்சாபில் சிக்ஸர் விளாசிய சித்து!
மாஜி கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றுள்ளார்.
டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரரும், இரு முறை பாஜக எம்.பி.யாக இருந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அக்கட்சியிலிருந்து விலகிய சித்து, ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கினார். பின்னர் சட்டசபை தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்னர் அவர் காங்கிரஸில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அத்தொகுதியில் போட்டியிட்ட சித்து 60,477 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜேஷ்குமார் ஹானியும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் சரப் ஜோத் சிங் தஞ்சால் ஆகியோரும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் ஏற்கனவே இரு முறை எம்.பி.யாக இருந்தவர் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் விளையாட்டில் தனக்கே உரிதான ஸ்டைலில் விளையாடிய சித்து தற்போது அரசியலிலும் சாதித்து வருகிறார்.