பனிக்குடம் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப்பிணியை மீட்ட கடற்படையினர்!
Recommended Video
ஆலுவா: கேரளத்தில் ஆலுவா பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் பனிக்குடம் உடைந்த நிலையில் இருந்த கர்ப்பிணியை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு அடித்த மழையால் அந்த மாநிலமே எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாகவே காட்சியளிக்கிறது.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முப்படைகளின் வீரர்களும் இணைந்துள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணி
ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சஜீதா ஜபீல். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் வசித்த வீட்டை சுற்றிலும் வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
|
கடற்படை விமானம்
இந்நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த கடற்படையினர் கடற்படை விமானம் மூலம் ஆலுவா பகுதியை அடைந்தனர்.
ஆண் குழந்தை
அங்கு பனிக்குடம் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சஜீதாவை மீட்டு கடற்படை மருத்துவமனையான ஐஎன்எஸ் சஞ்சீவினியில் அனுமதித்தனர். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
|
சென்னை வெள்ளம்
தாயும் சேயும் நலமாக உள்ளதாக நேவல் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதே போல் சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த வெள்ளத்தின் போது நிறைமாத கர்ப்பிணியான சித்ரா கழுத்தளவு நீரில் சிக்கியதை அடுத்து அவரை யூனிஸ் என்ற இளைஞர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.