உள்நாட்டு ஆயுதங்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் கடற்படை தளபதி
டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிஸ்டம்கள், ஆயுதங்களை பயன்படுத்த கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த கடற்படை கமாண்டர்கள் மாநாட்டில் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் டிஆர்டிஓ மூலம் ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டிஆர்டிஓ மூலம் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், சிஸ்டங்களை கடற்படை வாங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கடற்படை விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி தெரிவித்த தோவன் கடற்படை டிசைனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டிஆர்டிஓவுடன்(பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
டிஆர்டிஓ தலைவர் கடந்த ஜனவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து டிஆர்டிஓவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தோவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்துறை மேம்பாடு, மனிதவள நிர்வாகம், கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்படையில் சைபர் பாதுகாப்பு ஆகியவை பற்றி தோவன் மாநாட்டில் பேசினார்.
கடற்படையில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் நலம் காப்பது நமக்கு முக்கியம். அவர்கள் தான் கடற்படையின் மிகப்பெரிய பலம் என்றார் தோவன்.