மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்.. அடிப்பகுதிக்கு சென்ற மீட்புக்குழு
கவுகாத்தி: மேகாலயா மலைப் பகுதியில் 15 தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு மீட்புக்குழுவை சேர்ந்த நபர் முதல் முறையாக சென்று சேர்ந்திருக்கிறார்.
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா உள்ள மலைப்பகுதியில் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்துக்குள் 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக அவர்கள் அந்த சுரங்கத்துக்குள் சிக்கி தவித்து வருகின்றனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. இருப்பினும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
ஒடிசாவில் இருந்து மீட்புப் பணிக்காக விரைந்த சிறப்பு தீயணைப்புப் படையினர் மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளைக் கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சுரங்க வாயிலை மூடியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சுரங்கத்துக்குள் ஆழ்கடல் நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்ற வீரர்கள் இறங்கி தேடி வருகின்றனர்.கிட்டத்தட்ட 19 நாட்களுக்கு மீட்பு பணிகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் 370 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தின் அடிபாகத்துக்கு சென்றுள்ளார்.
சுரங்கத்தினுள் தேடுதல் வேட்டையை நடத்திய போது யாரும் உள்ளே இல்லை என்று மீட்புக்குழுவினருக்கு அவர் தகவல் கூறியுள்ளார். சுரங்கத்தின் முகப்பில் நிலக்கரி துகள்களும், சேறும் நிறைந்து காணப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.
சுரங்கத்தினுள் உள்ள சேறை முற்றிலும் அகற்றிய பின்னரே என்ன மாதிரியான நிலைமை என்பது முழுமையாக தெரிய வரும் என்று மீட்புக்குழுவினர் கூறியுள்ளளனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 19 நாட்களாக சுரங்கத்துக்குள் தவித்து வரும் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.