ஐஎன்எஸ் மகாதாயி கப்பலில் உலகம் சுற்றப் போகும் வாலிபிகள்!
கொச்சி: இந்திய கடற்படையில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகாதாயி கப்பல் கொச்சி வந்துள்ளது. இந்த கப்பல் அடுத்த ஆண்டு உலகப் பயணம் கிளம்ப உள்ளது.
இந்திய கடற்படை கப்பலான மகாதாயி-இல் கேப்டன் முதல் மாலுமிகள் வரை அனைவரும் பெண்கள். பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்த கப்பல் கோவா துறைமுகத்தில்
இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்றது.
விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் மகாதாயி கலந்து கொண்டது. பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய கப்பல் கடந்த 27ம் தேதி இரவு கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தது.
மகாதாயி கப்பலின் கேப்டனாக லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி கடந்த மாதம் 8ம் தேதி நியமிகப்பட்டார். கப்பலில் லெப்டினன்ட்கள் பி. ஸ்வாதி, பிரதிபா ஜாம்வல், விஜயா தேவி, துணை லெப்டினன்ட் பாயல் குப்தா ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
லெப்டினன்ட் பி. ஐஸ்வர்யா என்ற என்ஜினியர் அடுத்த மாதம் இந்த கப்பலில் பொறுப்பேற்க உள்ளார். மகாதாயி கப்பல் கொச்சிக்கு வரும் முன்பு சென்னைக்கு சென்றுள்ளது.
பெண்கள் மட்டுமே பணியாற்றும் இந்த கப்பல் அடுத்த ஆண்டு உலகை சுற்றி வர உள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாதாயி கப்பல் சில நாட்கள் கொச்சியில் இருந்துவிட்டு கோவா கிளம்ப உள்ளது.