அப்பா வந்ததும் எழுந்து நின்ற இந்திய மக்கள்.. நவாஸ் மகள் மரியம் பெருமிதம்!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் தனது தந்தை, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் போஸ்ட் போட்டு சிலாகித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் பாகிஸ்தானில் பிரபலமானவர். இவர் பாகிஸ்தான் அரசில், பிரதமரின் இளைஞர்களுக்கானத் திட்டத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
பிரதமர் மோடி பதவியேற்புக்கு தனது தந்தையை இந்திய அரசு அழைத்தது குறித்து வரவேற்று கருத்து தெரிவித்திருந்த மரியம், இந்திய, பாகிஸ்தான் இணைப்பு குறித்தும், மக்களின் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்தும், அமைதி குறித்தும் விருப்பம் தெரிவித்திருந்தார். இது பாகிஸ்தானில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் தனது தந்தையுடன் டெல்லி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மரியம் வரவில்லை. நவாஸ் மட்டுமே வந்திருந்தார். இந்த நிலையில் டெல்லி பதவியேற்பு விழாவில் தனது தந்தை கலந்து கொண்டது குறித்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போஸ்ட் போட்டுள்ளார் மரியம்.
பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள போஸ்ட்டில், பதவியேற்பு விழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது. என்ன ஒரு அழகான காட்சி.. என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் மரியம்.