ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்
தும்கா: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் சஸ்கஸ்த்ரா சீமாபால் என்ற பகுதியிலிருந்து டல்டங்கல் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிகளில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிலர், பாதுகாப்பு படையினர் வந்த வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
எதிர்பாராத இந்த தாக்குதலால் பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்தாலும், சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டனர். பின்னர் நக்சலைட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் - நக்சலைட்டுகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது.
துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 5 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உயரதிகாரிகள் மோதல் நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரம் துவங்கி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. பாதுகாப்பு படையினரின் ஆக்ரோஷ தாக்குதலில் 5 நக்சலைட்டுளுக்கு துப்பாக்கி குண்டுகளால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
கிராம சபையில உட்கார்ந்து, டீ குடிச்சு, ஜீன்ஸ் போட்டு.. ஜிம்முக்கு போய்..ஸ்டாலின் மீது பாய்ந்த சீமான்
ஆனால் மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து காயமடைந்த நக்சலைட்டுகள் தப்பியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியை பாதுகாப்பு படையினர் முடுக்கி விட்டுள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த அவர்கள், தப்பி சென்று உயிர் பிழைத்துள்ளார்களா அல்லது அடர்ந்த வனத்தின் வேறு ஏதாவது பகுதியில் உயிரிழந்து கிடக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஒருவேளை காயமடைந்த நக்சலைட்டுகள் உயிர் பிழைத்திருந்தால், மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், யாரேனும் சந்தேகப்பம்படி வந்தால் தகவல் அளிக்குமாறு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகளுடனான மோதலின் போது காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் நீரஜ் சத்துரி, குண்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இதனையடுத்து அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பாதி வழியிலேயே அவர் வீரமரணம் அடைந்தார்.
இவரை தவிர மேலும் 4 பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்கள் நடத்திய திடீர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.