ஜார்க்கண்டில் அமித் ஷா இன்று பிரச்சாரம்... பாஜக அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்த நக்சலைட்டுகள்
ராஞ்சி: ஜார்க்கண்டில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்குள்ள பாஜக அலுவலகத்தை நக்சலைட்டுகள் குண்டு வீசி தகர்த்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில், நக்சலைட்டுகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், 5 ம் கட்டமாக வருகிற 6 ஆம் தேதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், மாநில பாஜக தலைவருமான அர்ஜுன் முண்டா போட்டியிடும் குந்தி தொகுதிக்கு உட்பட்ட கர்சவன் என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை நக்சலைட்டுகள் நள்ளிரவில் குண்டு வீசி தகர்த்தனர். குந்தி தொகுதியில் இன்று அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோ
இதனால் இப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், ஃபனி புயல் காரணமாக, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருவதால், பிரதமர் மோடியின் ஜார்க்கண்ட் பிரச்சாரப் பயணம் ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மஹாராஷ்ட்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் தடாப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில், நக்சலைட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி கமாண்டோ படை வீரர்கள் 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், நக்சலைட்டுகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.