சுக்மா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சிதைத்து நக்சலைட்டுகள் அட்டூழியம்!
பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அவரது உடல்களை சிதைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் சில வீரர்களின் உடல்களை நக்சல்கள் சிதைத்துள்ள சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர், பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் மொத்தம் 44 மாவட்டங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை விரும்பாத நக்சல்கள் மொத்தமுள்ள 44 மாவட்டங்களிலும், படை வீரர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் அவ்வப்பொழுது எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாகவே, நேற்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மோசமான சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது, நக்சல்கள், சரமாரியாகச் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத சிஆர்பிஎப் வீரர்களில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிய நக்சல்கள் பாதுகாப்பு படை வீரர்கள் சிலரது உடல்களை சிதைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.