சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்... 6 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம்
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ரோந்துப் பணியில் இருந்த 6 பாதுகாப்புப்படை வீரர்கள் மரணமடைந்து உள்ளனர். தாக்குதல் நடந்த இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் என்கிற கிராமம் அருகே, பாதுகாப்புப்படை வீரர்கள் வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடித்தில், சம்பவ இடத்திலேயே 6 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நக்சல் ஒழிப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், சம்பவ இடத்தில் நக்சலைட் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கை விரைவில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வீரர்களின் துப்பாக்கிகளை நக்சலைட்டுகள் எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.