காஷ்மீர் சட்டசபையில் பாஜகவால் பஞ்சாயத்து.. எதிரொலித்தது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்!
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எதிரொலித்தது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாஜக கிளப்பிய பஞ்சாயத்தால் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்கிற கோஷத்தை தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பினர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது சபாநாயகர் கவீந்தர் குப்தா, ஜம்மு நகரில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் ரோஹிங்யா முஸ்லிம்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. தேசிய மாநாட்டு கட்சியின் அலி முகமது சாகர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைத்து குற்றம் சாட்டக் கூடாது. பாதுகாப்பு குறைபாடுகளுக்காக மத்திய அரசைத்தான் குறைகூற வேண்டும்.
இந்த விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றார். அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் எழுந்து பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பதிலடி தர, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் முகமது அக்பர் லோனே, நான் ஒரு முஸ்லிம். என்னுடைய உணர்வுகளை பாஜக எம்.எல்.ஏக்கள் காயப்படுத்துகின்றனர். ஆகையால் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்களை எழுப்பும் நிலை உருவானது என்றார்.