ஜெய்ஷா விவகாரம்... தூக்கு போட்டு தொங்கலாம்... தேசியவாத காங்கிரஸ் காட்டம்
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டியில் பங்கேற்ற ஜெய்ஷாவிற்கு முறையாக பானம் எதுவும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நாம் அனைவரும் தூக்கு போட்டு தொங்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் மஜித் மேனன் காட்டமாக பேசியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜயகோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கோரியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்தது. இதில், 42 கிலோ மீட்டர் மகளிர் மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில், ஜெய்ஷா பங்கேற்றார். போட்டியின் போது இவருக்கு போதிய தண்ணீர், குளுகோஸ் உள்ளிட்ட பானங்கள் இந்திய அரசால் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் மஜித் மேனன் "இது வெட்கக்கேடான விஷயம், உலக அளவிலான போட்டியில் பங்கேற்ற ஜெய்ஷாவிற்கு இப்படி நடந்ததற்கு நாம் எல்லோரும் தூக்கு போட்டு தொங்கலாம். குடிக்க தண்ணீர் கூட கொடுக்காத நமக்கு விளையாட்டு வீர்ர்கள் தங்கம் கொண்டு வர வேண்டுமா? இந்த பொறுப்பற்றத்தனத்திற்கு பொறுப்பேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.