மகாராஷ்டிராவில் யார் ஆட்சி? அத்தனை பார்வையும் இவரை நோக்கி.. கிங் மேக்கரான சோனியா காந்தி!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குப் பிறகுதான் தேசியவாத காங்கிரசும் அது தொடர்பாக முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசின் மையக்குழு கூட்டம் மும்பையில் இன்று சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. அதில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தரவில்லை. எனவே தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு அழைப்புவிடுத்து, 24 மணி நேர கெடு கொடுத்துள்ளார்.
எனவே சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் இணைந்து, ஆட்சியமைக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
நவாப் மாலிக் பேட்டி
முன்னதாக இன்று மதியம் மும்பையில் நிருபர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில், ஒருவரான நவாப் மாலிக் கூறுகையில், எங்களது ஆதரவை சிவசேனா கட்சி நாடி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
காங்கிரஸ்
மாநிலத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக விவாதம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை பொருத்துதான், தேசியவாத காங்கிரஸ் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
கூட்டணி தர்மம்
ஏனெனில் தேர்தலின் போது நாங்களும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட்டோம். எனவே எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் இணைந்துதான் எடுப்போம். இவ்வாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டம்
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் நடைபெற்ற அந்த கட்சியின், செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மாலையில் நடைபெற்ற கூட்டத்திலும் இறுதி முடிவு வெளியாகவில்லை. எனவேதான், சிவசேனாவால் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இப்போது, சிவசேனாவுடன் இணைந்து, தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் சோனியா காந்தியின் முடிவுதான் முக்கியமானது.
எனவே, காங்கிரசின் முடிவை நோக்கி அரசியல் விரம்சகர்கள் பார்வை திரும்பியுள்ளது.