ஆன்லைனில் தேர்தல் நடந்திருந்தால் இது தான் ரிசல்ட்: பாஜக 314 -342; காங். 98-127; ஆம் ஆத்மி 86-117
பெங்களூர்: சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள், உரையாடல், ட்விட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 300 இடங்களுக்கும் அதிகமாகவும் காங்கிரஸ் கூட்டணிக்கு100 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் இத்தனை ஆயிரம் பேரிடம், லட்சம் பேரிடம் கருத்துகள் கேட்டோம்.. என்ற அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
சமூக வலைதள ஆய்வு
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துகள், உரையாடல்கள், ட்விட்டுகள் என நாள்தோறும் குவிந்து கொண்டிருக்கின்றன.
ஏப்ர 1 முதல் மே 12 வரை..
கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரையிலான இந்த வகையான அனைத்து பதிவுகளையும் அலசி ஆராய்ந்து 'சமூக வலைதளங்களின்' எக்ஸிட் போல் முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் தேர்தலை நடத்தினால் இப்படித்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும்.
பாஜக கூட்டணிக்கு 314-342
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 310 முதல் 342 இடங்களைக் கைப்பற்றும்.
காங்கிரஸ் கூட்டணிக்கு 98-127
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 98 முதல் 127 இடங்கள் கிடைக்கும்.
ஆம் ஆத்மிக்கு 86-117
ஆம் ஆத்மி கட்சிக்கு 86 முதல் 117 இடங்கள் கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சியினர் சமூக வலைதளங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம்-புதுச்சேரியில் பாஜகவுக்கு 24 இடம்
இந்த சமூகவலைதள உரையாடல்கள்படி தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 24 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 8, ஆம் ஆத்மிக்கு 6, அதிமுகவுக்கு 1 , திமுகவுக்கு 1 இடம் என்று எகிறி இருக்குமாம்.
அதாவது சமூக வலைதளங்களில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மியினர் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இம்முடிவுகள்.
ஆன்லைனில் தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் தீயா வேலை செய்யனும்போல..!