பாஜக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர்.. பன்முக திறமை கொண்ட வெங்கையா நாயுடு!
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் வெங்கய்யா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
வெங்கையா நாயுடுவின், வாழ்க்கை குறிப்பு இதுதான்: 1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த இவர் தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார். அப்போது இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்தார். இவரது பேச்சாற்றல் காரணமாக விரைவிலேயே பெரும் புகழை பெற்றார்.
1972ல் நடைபெற்ற ஜெய் ஆந்திரா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1978 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உதயகிரி சட்டசபை தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வெங்கையா நாயுடு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
1998, 2004 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். பாஜகவின் தேசிய தலைவர் என்ற பதவி 2002ல் இவருக்கு கிடைத்தது. தீவிர சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்த்தவர் வெங்கையா நாயுடு.
2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றபோதும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் வெங்கையா, ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதில் முக்கியமானவர். தமிழகத்திலும் பல நகரங்களை இந்த திட்டத்தில் இவர் இணைத்துள்ளார்.