'பலவீன' மோடி- 'ஆமை' அரசு- மன்மோகன் சிங்குக்கு புகழாரம்.. அருண்ஷோரி பொளேர்!
டெல்லி: நரேந்திர மோடியை போன்ற பலவீனமான பிரதமரை இதுவரை இந்த நாடு கண்டதில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாகத் தாக்கி பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
"பிசினஸ் ஸ்டாண்டர்ட்" நாளிதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் டி.என். நினான் எழுதிய ‘Turn of The Tortoise' என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷியாம் சரண் மற்றும் பா.ஜ.க.வின் அருண்ஷோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அருண்ஷோரி பேசியதாவது:
பொருளாதாரத்தை சமாளிப்பது என்பது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தால் போதும் என்று நினைத்து மோடி செயல்படுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது ஆட்சி நடத்தவில்லையே என்று மக்கள் ஏங்க தொடங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளைத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் பின்பற்றி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் கூடுதலாக பசு மாட்டு சர்ச்சை மட்டுமே இணைந்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தாலும் பலன் ஒன்றுமே இல்லை.
எந்த ஒரு காரணமும் இல்லாமல் வங்கி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகையால்தான் பாரதிய ஜனதா கூட்டணி அரசை ஆமையுடன் ஒப்பிடுவது சரியான ஒன்று.
இவ்வாறு அருண்ஷோரி கடுமையாக சாடினார்.
தற்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் அருண்ஷோரி முன்னர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. பதிலடி
அருண்ஷோரியின் கருத்தை கடுமையாக நிராகரித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மோடி தலைமையிலான அரசில் ஒரு ஊழல்கூட கிடையாது. அருண்ஷோரிக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது.. ஆனால் நாட்டு மக்கள் எண்ணம் வேறானது என்றார்.