மோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு
2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மோடி தலைமையில் சந்திப்பது என தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுசெய்துள்ளது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான், சிவசேனா உள்ளிட்ட 33 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மோடி தலைமையில் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது பாஜக. அந்தத் தேர்தலில் பாஜக மட்டும் 283 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களையும் தாண்டி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக. இந்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலையும் மோடி தலைமையில் சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.