அ.தி.மு.கவின் தம்பிதுரைக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி?
டெல்லி: லோக்சபா துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் புதிய சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
71 வயதாகும் சுமித்ரா மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 9 முறை லோக்சபாவுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
து.சபா தேர்தல்
பின்னர் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். இதுபற்றி விவரங்கள் நாளை தெரியவரும். பொதுவாக துணை சபாநாயகர் பதவியை பிரதான எதிர்க்கட்சிக்கு கொடுப்படுவது வழக்கமாகும்.
காங்கிரஸுக்கு கிடைக்குமா?
ஆனால் இந்த முறை பாரதிய ஜனதாவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் வகையில் வெற்றி பெறவில்லை. 54 எம்.பி.க்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலையில் 44 இடங்களையே பெற்றுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக் குமா? என்பது ஆளும் கட்சி செய்யும் முடிவைப் பொறுத்தே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், அந்த கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
3வது பெரிய கட்சி அதிமுகவுக்கு..
காங்கிரசுக்கு பதில் லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவியை கொடுக்க பா.ஜ.க. தலைவர்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
47 எம்.பிக்கள்
நாடாளுமன்ற இரு சபைகளிலும் அ.தி.மு.க. வுக்கு மொத்தம் 47 எம்.பி.க் கள் உள்ளனர். முக்கிய சட்ட மசோதாக்களை நிறை வேற்றும் போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துணை சபா நாயகர் பதவியை அ.தி.மு.க.வுக்கு கொடுக்க பா.ஜ.க. விரும்புகிறது.
தம்பிதுரை
அ.தி.மு.க. இந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவரான தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் 1980களில் ராஜீவ்காந்தி தலைமையிலான ஆட்சியின்போது துணை சபாநாயகராக இருந்துள்ளார்.
அதிமுக மறுத்தால் திரிணாமுலுக்கு..
அ.தி.மு.க. மேலிடம் இந்த பதவியை ஏற்க மறுத்தால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஒருவரை துணை சபாநாயகர் ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.