எமர்ஜென்சி போல என்.டி.டி.வி.க்கு தடை விதிப்பதா? எடிட்டர்ஸ் கில்ட் கடும் கண்டனம்!
எமர்ஜென்சி காலத்தைப் போல என்டிடிவி சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக எடிட்டர்ஸ் கில்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: பதன்கோட் தீவிரவாத தாக்குதல் செய்திக்காக என்டிடிவி இந்தி சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பதன்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை ஒளிபரப்பு செய்ததில் பாதுகாப்பு அம்சங்களை மீறிவிட்டது என்டிடிவி இந்தியா என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதற்காக வரும் 9ந் தேதி 24 மணிநேரம் அந்த சேனல் ஒளிபரப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டிடர்ஸ் கில்ட் ஆப் இந்தியாவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் வெளியிட்டுள்ள அறிக்கைள்
என்.டி.டி.டி.வி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கடும் கண்டனத்துக்குரியது. ஜனவரி 2-ந் தேதி பதன்கோட் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு முக்கிய தகவல்களை என்டிடிவி கிடைக்க செய்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் என்டிடிவி நிர்வாகமோ, மற்ற ஊடகங்கள் ஒளிபரப்பாத எந்த ஒரு தகவலையும் நாங்கள் வழங்கவில்லை என விளக்கம் அளித்திருக்கிறது.
ஒரு டிவி சேனலை நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய தடை விதிப்பது என்பது ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். இது எமர்ஜென்சி காலத்தை எதிரொலிப்பதாக உள்ளது.
ஒரு ஊடகம் பொறுப்பற்ற முறையில் செய்திகளை கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை செய்யாமல் ஊடகங்களுக்கு தடை விதிப்பது என்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும்.
என்டிடிவி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.