தீவிரவாத தாக்குதல் செய்தியால் மத்திய அரசு கோபம்.. 'என்டிடிவி இந்தியா' சேனலுக்கு 24 மணி நேர தடை!
டெல்லி: பதன்கோட் தீவிரவாத தாக்குதலை பொறுப்பற்றத் தனமாக செய்தி ஒளிபரப்பிய குற்றச்சாட்டின்பேரில் 'என்.டி.டி.வி இந்தியா' ஹிந்தி சேனல் ஒளிபரப்புக்கு 24 மணி நேரம் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி 2ம் தேதி ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, சென்சிட்டிவான சில விவகாரங்களை 'என்.டி.டி.வி இந்தியா' ஹிந்தி சேனல் ஒளிபரப்பியது. ஏற்கனவே மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது டிவி சேனல் ஒளிபரப்புதான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சரகங்களுக்கு இடையேயான கமிட்டி, இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்தது. குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக கமிட்டி கருதியது. எனவே, 'என்.டி.டி.வி இந்தியா' ஹிந்தி சேனலை 24 மணி நேரம் முடக்க அது பரிந்துரை செய்தது. மத்திய அரசு இதை ஏற்றுக்கொண்டுள்ளது.
வரும் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் மறுநாள் மதியம் 1 மணிவரை சேனல் ஒளிபரப்பை தடை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சேனல் முடக்கப்படுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.