ராஜஸ்தானில் சுயேட்சைகளுக்கும் ஜாக்பாட்… பெண்கள், தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அரசில், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் பெண்களை அமைச்சர்களாக தேர்ந்தெடுக்க முதலமைச்சர் அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டும் முடிவு செய்துள்ளனர்.
5 மாநில தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றிக்கனியை கொடுத்த மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. மக்கள் அளித்த ஆதரவால் ஆட்சியமைத்துள்ள காங்கிரசில் முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்றுள்ளார். அவருக்கு உறுதுணையாக ராகுலின் நன்மதிப்பை பெற்ற சச்சின் பைலட், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆட்சியை தொடர்ந்து அமைச்சரவை யார், யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இம்முறை அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி யார், யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்த முதல் ரவுண்ட் தகவல்களும் வெளியாகி உள்ளன. குறிப்பாக பெண் எம்எல்ஏக்களில் கமான் தொகுதியில் வென்ற ஜாஹிதாகான் மியா, பன்சூர் எம்எல்ஏ ஷகுந்தலா ராவத், சிர்க்காய் தொகுதி எம்எல்ஏ மம்தா பூபேஷ் ஆகியோருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று தெரிகிறது.
மொத்தமுள்ள 99 எம்எல்ஏக்களில் கட்சியினர் தவிர சில சுயேட்சை எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிட்டப்போகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மகாதேவ் சிங் கண்டேலா, சிர்ஹோகி தொகுதி சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரின் பெயர்களும் தேர்வு பட்டியலில் உள்ளன.
அரை டஜனுக்கும் மேலான எம்எல்ஏக்கள் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும் சந்தித்து அமைச்சரவை பட்டியலில் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதே நேரத்தில் ஹரீஷ் மீனா, வசுந்தராவை வீழ்த்திய மன்வேந்தரா ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் ஒன்று உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர்கள் இருவருமே சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு தாவியவர்கள். பிகேனர் மேற்கு தொகுதி எம்எல்ஏ கல்லாவும் அமைச்சர் கனவில் உலா வந்து கொண்டிருக்கிறார்.
துரிதமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் கெலாட் விரைவில் டெல்லி மேலிடத்துடன் கலந்து கொண்டு, இறுதி பட்டியலை அறிவிப்பார் என்று தெரிகிறது. மொத்தம் 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.