கோரக்பூரில் தொடரும் மரணங்கள்... 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பரிதாப பலி!
கோரக்பூரில் மூளையழற்சி நோய் காரணமாக பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 குழந்தைகள் உயிரிழந்தள்ளன.
லக்னோ : கோரக்பூரில் கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 42 குழந்தைகள் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் மூளையழற்சி நோய் காரணமாக உயிரிழந்தள்ளன.
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும், ஒரு துயரமாக கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை வளாகங்கள் தண்ணீரால் மூழ்கியதாலும், அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது.
மருத்துவமனை முதல்வர் விளக்கம்
குழந்தைகள் மரணம் குறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முதல்வர் சிங் கூறுகையில் கடந்த சனிக்கிழமை 9 குழந்தைகளும், ஞாயிற்றுக்கிழமை 10 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. 9 குழந்தைகள் மூளையழற்சி நோயால் உயிரிரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்ற குழந்தைகள் மரணம் குறித்து ஆராயப்படுகிறது என்று தெரிவித்தார்.
கனமழையால் பாதிப்பு
குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும் போது மழை வெள்ளம் காரணமாக உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி, நேபாளம், பீஹார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமடையும் என்றே தெரிகிறது எனக் கூறியுள்ளனர்.
மருத்துவ வசதி
கடந்த திங்கட்கிழமை வரையிலான இந்த ஆண்டிற்கான மருத்துவமனை பதிவுகளில் ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது. தங்கள் ஊரில் சரியான மருத்துவ வசதி கிடைக்காததாலேயே கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனை வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
விசாரணையில் கைது
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மருத்துவமனை முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா சுக்லா இருவரும் கான்பூரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.