ஐக்கிய அரபு நாட்டில் மோடியை சந்திக்க 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு...
அபுதாபி : ஐக்கிய அரபு நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 16 - 17-ம் தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வரும் 17 ம் தேதி மோடி பங்கேற்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்று மோடியை சந்திக்க இதுவரை சுமார் 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்திருப்பதாகவும், சுமார் 50 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்ய காத்திருப்பதாகவும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இணையதளம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 15 பேர் விண்ணப்பித்ததாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதே போன்று பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை சந்திக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.