குற்றவாளிகள் கட்சி பதவி வகிக்கவும் தடை தேவை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி
குற்றவாளிகள் கட்சிகளில் பதவி வகிக்கவும் தடை விதிக்க சட்டம் தேவை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள் கட்சிகளில் பதவி வகிக்கவும் தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாக்களிக்க முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளில் தொடர முடியும் என்கிற நிலை இருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளி. அவரால் வாக்களிக்க முடியாது. அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலராக இருந்து வருகிறார்.
அதிமுக கட்சிப் பதவிகளில் இருந்தும் சசிகலாவை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:
அரசியல் சாசன 11A மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டம் 65- பிரிவின்படி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் வாக்களிக்க முடியாது; அதே நேரத்தில் கட்சிகளில் பதவிகள் வகிக்க தடை இல்லை என்கிறது. இருப்பினும் இத்தகைய குற்றவாளிகள் கட்சிகளில் பதவி வகிக்கவும் தடை விதிக்கவும் சட்டம் கொண்டுவர வேண்டிய தருணம் இது.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.