தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு!
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த கோரும் வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
டெல்லி: நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை தொடங்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அதன்பேரில் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசிடம் புதிய சட்ட வரைவை தமிழக அரசு சமர்ப்பித்தது.
இந்நிலையில் நீட்டுக்கு ஓராண்டு விலக்கு அளித்தால் அந்த தேர்வுக்காக தயாரான மாணவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும் என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் நேற்று மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜரானார்.
அப்போது, மருத்துவ சேர்க்கைக்கு தமிழகத்துக்கு கால அவகாசம் அளிக்க முடியாது. மருத்துவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியாகும். நீட் விவகாரத்தில் தமிழகத்தின் செயல்பாட்டை ஏற்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கேகே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக முடியாததால் அவருக்குப் பதிலாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா ஆஜராகி நீட் அவசர சட்டம் குறித்து விளக்கமளித்தார்.