படேலின் மதச்சார்பின்மைதான் தேவை.. வாக்கு வங்கி மதச்சார்பின்மை தேவையில்லை: மோடி
அகமதாபாத்: நாட்டுக்கு தேவை சர்தார் படேலின் மதச்சார்பின்மைதானே தவிர வாக்கு வங்கி அரசியலுக்கான மதச்சார்பின்மை அல்ல என்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் சர்தார் படேலின் 138வது பிறந்த நாளை ஒட்டி அவரது உருவசிலையை திறந்து வைத்து பேசிய மோடி, சர்தார் படேலை ஒரு கட்சிக்கு உரியவராக அடையாளப்படுத்துவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். அவர்தான் உண்மையான மதச்சார்பின்மையாளர்.
நமக்கு இப்போது தேவையும் சர்தார் படேலின் மதச்சார்பின்மை கோட்பாடுதான். வாக்கு வங்கி அரசியலுக்காக சொல்லப்படும் மதச்சார்பின்மை அல்ல.. மதச்சார்பின்மையை கடைபிடித்த படேல்தான் இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது சர்தார் படேல் முதல் பிரதமராகி இருந்தால் இந்த நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று மோடி பேசியிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக சர்தார் படேல் ஒரு காங்கிரஸ்காரர் என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருந்தார்.
இதற்கு பதில் தரும் வகையிலேயே இன்று மோடி, படேலை ஒரு கட்சிக்குரியவராக அடையாளப்படுத்தக்கூடாது என்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.