பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரூ. 17 லட்சம் அபேஸ்- ஏமாற்றிய பெண்ணுக்கு வலைவீச்சு!
மும்பை: மும்பையில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரூபாய் 17 லட்சம் நகை, பணம் வாங்கி மோசடி செய்து தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே மேற்கு, கோட்பந்தர் பகுதியில் உள்ள பரமானந்த் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் அந்த பகுதியில் தன் கணவருடன் சேர்ந்து ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் நன்கு பழகினார்.
மேலும் இவர் தன் வீட்டருகில் வசிக்கும் ரவினா, சீதால், உஜ்வாலா ஆகியோரிடம் கடந்த ஒரு ஆண்டாக ரூபாய் 17 லட்சம் நகை, பணம் ஆகியவற்றை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயஸ்ரீ திடீரென தன் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார்.
ஜெயஸ்ரீ சொந்த ஊருக்கு ஏதேனும் அவசர வேலையாக சென்று இருக்கலாம் மீண்டும் திரும்பி வருவார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர் மாத கணக்கில் திரும்பி வராததால் ஜெயஸ்ரீ அவர்களை ஏமாற்றியதை அறிந்தனர்.
இதையடுத்து ரவினா, சீதால், உஜ்வாலா ஆகியோர் இந்த மோசடி குறித்து காசர்வாடி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீயை வலைவீசி தேடி வருகின்றனர்.