நீட்: 2 நிமிட தாமதத்தால் உள்ளே அனுமதிக்கவில்லை.. பெங்களூரில் சுவர் ஏறி குதித்த மாணவிகள்!
நீட் தேர்வு எழுத காலதாமதமாக வந்த காரணத்தால் பெங்களூரில் மூன்று பேரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு எழுத காலதாமதமாக வந்த காரணத்தால் பெங்களூரில் மூன்று பேரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் கல்லூரியின் சுவர் ஏறி உள்ளே குதித்து இருக்கிறார்கள்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிமாநிலங்களிலும் இந்த மாதிரியான மோசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதில் முக்கியமானது, 9.30 மணிக்கு மேல் வரும் மாணவ, மாணவிகள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கறாராக உள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள எம்.ஜி சாலை அருகே உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் 9.30 மணிக்கு பின் தேர்வெழுத வந்த மாணவர்கள் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை. இதில் ஒருவர் மாணவர், இரண்டு பேர் மாணவிகள். இவர்கள் எவ்வளவு கெஞ்சியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கர்நாடக மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, இவர்கள் மொத்தமாக இரண்டு நிமிடம் மட்டுமே கால தாமதமாக வந்துள்ளனர். ஆனாலும் யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் சண்டை போட்டும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் மூன்று பேரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். மாணவர்களின் பெற்றோர்களே அவர்களை உள்ளே எகிறி குதிக்க சொல்லி உதவினார்கள். இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஆனால் உள்ளே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா என்ற விவரம் வெளியாகவில்லை.