சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நீட் தேர்வு - மத்திய அரசு முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படியே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி: மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படியே கேள்விகள் கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடப்பாண்டு 2018 நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. இந்த சூழலில் நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்தாண்டு பாடத்திட்டத்தின் படியே, நடப்பாண்டிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமச்சீர் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மருத்துவ படிப்பில் ஏழை எளிய மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.