நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு.. பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர்.
நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 88,000 பேர் எழுதினர்.
இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு எட்டாக்கனியாகிவிடும் என்பதால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வு முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் வடமாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கான கேள்வித் தாளும், தமிழகத்தில் கேட்கப்பட்ட கேள்வித்தாளும் வேறு மாதிரியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் ரத்தத்தில் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
தமிழக அமைச்சர்களும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினர்.