நேருவுக்கும் என் அம்மாவுக்குமான உறவு என்ன தெரியுமா.. விவரிக்கும் மவுண்ட்பேட்டன் மகள்
நேருவுக்கும் தமது தயாருக்குமான உறவு பற்றி நாட்டின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் விவரித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் ஜஹவர்லால் நேருவுக்கும் தமது தாயாருக்குமான உறவு பற்றி நாட்டை ஆண்ட இங்கிலாந்தின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மகள் பமிலா ஹிக்ஸ் விவரித்துள்ளார்.
நேருவுக்கும் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்கிறது வரலாற்று பக்கங்கள், புகைப்படங்கள்.. இந்த உறவு பற்றி மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் 'டாட்டர் ஆப் எம்பயர்: லைப் அஸ் அ மவுண்ட் பேட்டன்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:
என்னுடைய தந்தை மவுண்ட்பேட்டன் இந்தியாவின் வைசிராயாக நியமிக்கப்பட்ட போது எனக்கு வயது 17. நாங்கள் இந்தியா வந்தபோது நேருவுக்கும் என்னுடைய தாய்க்கும் இடையே ஆழமான உறவு இருந்தது.
கடிதங்கள்
இந்த உறவை பற்றி நிறையவே தெரிந்து கொள்ள விரும்பினேன். என் தாயாருக்கு நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் படித்தேன். தாய் எட்வினா மீது நேரு கொண்டிருந்த ஆழமான நேசிப்பை அதில் புரிந்து கொண்டேன்.
உடல்ரீதியாக?
நேருவுக்கும் என் தாயாருக்கும் இடையே உடல் ரீதியாக தொடர்பு இருந்திருக்குமோ என்றெல்லாம் கூட அறியும் ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் அப்படியான ஒரு உறவு இருவருக்கும் இடையே இருந்திருக்காது என உறுதியாகவும் நம்பினேன்.
வாய்ப்பு இல்லை
இருவரும் தனிமையில் இருந்தனர் என்பது மிகவும் அரிதானது. எப்போதுமே இருவரையும் சுற்றி பணியாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் என ஏராளமானோர் இருந்தனர்.
மரகத கல் மோதிரம்
நாங்கள் இந்தியாவை விட்டு புறப்படும்போது, நேருவுக்கு என் தாய் எட்வினா ஒரு மரகத கல் மோதிரத்தை பரிசாக தர விரும்பினார். ஆனால் நேரு இதை ஏற்கமாட்டார் என்பதையும் அறிந்திருந்தார்.
இந்திராவிடம்
அதனால் நேருவின் மகள் இந்திராவிடம் அந்த அன்பு பரிசை கொடுத்தார். அப்போது, எல்லோருக்கும் பணத்தை வாரி வழங்கும் நேருவுக்கு பொருளாதார பிரச்சனை வந்தால் இந்த மோதிரத்தை விற்று பணம் தந்துவிட இந்திராவிடம் எட்வினா அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறு மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் தமது புத்தகத்தில் எழுதியுள்ளார்.