பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவியை கேட்டார் நேரு: உமாபாரதி
பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவி கோரி அதன் தலைவராக இருந்த கோல்வாக்கருக்கு நேரு கடிதம் எழுதியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
போபால்: பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவி கோரி அதன் தலைவராக இருந்த கோல்வாக்கருக்கு நேரு கடிதம் எழுதியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தைவிட 3 நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் யுத்தத்துக்கு தயாராகிவிடும் என்பது அதன் தற்போதைய தலைவர் மோகன் பகவத் பேச்சு. அவரது ராணுவத்தை இழிவுபடுத்தும் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஹரிசிங் மறுப்பு
இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாவது:
1948-49 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஆனால் ஷேக் அப்துல்லா ஹரிசிங் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார்.
பாகிஸ்தானின் யுத்தம்
அப்போது திடிரென காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஜம்முவின் உதம்பூர் வரை பாகிஸ்தான் முன்னேறியது.
ஆர்.எஸ்.எஸ். உதவி
அப்போது இந்திய ராணுவம் யுத்தத்துக்கு தயாராக இல்லை. இதனால் பிரதமராக இருந்த நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வாக்கருக்கு கடிதம் எழுதி உதவி கேட்டார்.
யுத்தத்துக்கு உதவிய ஆர்.எஸ்.எஸ்.
இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்துக்கு உதவினர். எனினும் மோகன் பகவத்தின் கருத்து குறித்து தாம் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.