ஆசிட் வீசி ரயில்களுக்கு தீவைத்த நெல்லை வாலிபர் ஒடிசாவில் கைது! தீவிரவாதியான என விசாரணை
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பல ரயில் கோச்சுகளை அமிலம் ஊற்றி எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரன் என்பவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒடிசா மாநிலம், பூரி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கோச்சுகள் கடந்த பல நாட்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுபாஷ் ராமச்சந்திரன் என்ற வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒரு அமிலத்தை ரயில் பெட்டிகளின் இருக்கையில் ஊற்றி தீப்பிடித்து எரிய வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. நெல்லையை சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரனிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மற்றொரு குழு இந்த அமிலத்தை இவரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், மூன்று, நான்குமுறை, சுபாஷ், திருமலை கோயிலுக்கு சென்று நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது., திருமலையிலுள்ள சிசிடிவி காமிராக்களில் சுபாஷ் குறிப்பிட்ட நாளில் அவரது உருவம் பதிவாகியுள்ளது. எனவே, அமிலத்தை கொண்டு திருமலையில் சுபாஷ் ஏதேனும் விஷமத்தனம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தீவிரவாதிகளுடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சுபாஷ் கைதும் முக்கியத்துவம் பெறுகிறது.