கோவிஷீல்டு தடுப்பூசி அவரசகால பயன்பாட்டுக்கு நேபாளம் ஒப்புதல்!
காத்மாண்டு: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நமது அண்டை நாடான நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நாளை கொரோனா மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா செனக்கா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கும், கோவோக்சின் தடுப்பூசிக்கும் இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் நாளை முதல் போடப்பட உள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேபாள அரசு கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்தியாவுடன் ஒரு பெரிய கொரோனா தடுப்பூசி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக, நேபாளத்தின் மருந்து நிர்வாகத் துறை (டி.டி.ஏ) அந்த நாட்டில் கோவிஷீல்ட் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. நேபாள-இந்தியா கூட்டு ஆணையத்தின் ஆறாவது கூட்டத்தில் பங்கேற்க நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி தற்போது தலைநகர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில் நேபாளத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு
நேபாளத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சீனா, ரஷ்யா போன்ற பிற உற்பத்தி நாடுகளும் நேபாளத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டின, ஆனால் காலநிலை நிலைமைகள், விலை நிர்ணயம், தளவாட வசதி மற்றும் இறக்குமதி எளிமை காரணமாக நேபாளம் இந்திய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.