கொல்கத்தாவில் பயங்கரம்: ஓடும் காரில் இளம்பெண் 4 பேரால் பலாத்காரம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேபாளத்தை சேர்ந்த 24 வயது பெண் 4 பேரால் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த 24 வயது பெண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு நண்பர் ஒருவரை சந்திக்க டாக்சியில் காபி கடைக்கு சென்றுள்ளார்.
தவறான இடத்திற்கு சென்றுவிட்டதை உணர்ந்த அவர் செக்டர் 5ல் இறங்கிவிட்டார். வழி தெரியாமல் குழம்பிய அவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ தனக்கு வழி தெரியாது என்று கூறி தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார்.
உடனே ஒரு எஸ்.யு.வி. காரில் அந்த வாலிபரின் நண்பர்கள் 3 பேர் வர அவர்கள் நாங்கள் உங்களை அந்த காபி கடைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி காரில் ஏறிய அந்த பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அதிகாலை 3 மணி அளவில் சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை ரோந்து வந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரை தேடி வருகிறார்கள்.