5 மாதங்கள் கழித்து மீண்டும் துவங்கிய மேகி நூடுல்ஸ் விற்பனை: ஸ்நாப்டீலிலும் கிடைக்கிறது
டெல்லி: 5 மாதங்கள் கழித்து மேகி நூடுல்ஸ் இன்று மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அளவுக்கு அதிகமாக ஈயம் இருந்ததால் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நெஸ்லே இந்தியா தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது.
இதையடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸை மார்க்கெட்டில் இருந்து வாபஸ் பெற்றது. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பல்வேறு சிமெண்ட் ஆலைகளில் அழிக்கப்பட்டது.
இந்நிலையில் மேகி நூடுல்ஸை மீண்டும் தயாரித்து அதை 3 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி அவை அந்த நூடுல்ஸ் பாதுகாப்பானது என்றால் விற்பனையை துவங்கலாம் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு அண்மையில் மீண்டும் துவங்கியது.
அங்கு தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் 3 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அவை பாதுகாப்பானது என்று தெரிய வந்தது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் விற்பனை இன்று துவங்கியுள்ளது. ஆன்லைனில் ஸ்நாப்டீல் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் 12 பாக்கெட் நூடுல்ஸ்(70 கிராம்) ரூ.144க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் தடை விதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் விற்பனை மீண்டும் துவங்கப்படவில்லை. இது குறித்து அம்மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.