மேகி நூடுல்ஸ் தயாரிப்பு மீண்டும் துவக்கம்: அடுத்த மாதம் முதல் விற்பனை
டெல்லி: நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை மீண்டும் துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து விற்பனை துவங்கப்படும்.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பதாக கடந்த ஜூன் மாதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சிமெண்ட் ஆலைகளில் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் மேகி நூடுல்ஸ் மீதான தடை விலக்கப்பட்டது. இதையடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை மீண்டும் துவங்கியுள்ளது.
இது குறித்து நெஸ்லே இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவாவில் உள்ள எங்கள் ஆலைகளில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிதாக தயாரிக்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஆய்வகங்கள் நூடுல்ஸை ஆய்வு செய்து விற்பனை செய்யலாம் என்று கூறியவுடன் விற்பனை துவங்கப்படும் என்றார்.
அடுத்த மாதம் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. உயர் நீதிமன்றம் கூறியதின்படி 3 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட மேகி நூடுல்ஸ் ஆய்வில் அதில் எந்த நச்சுப் பொருளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது என நெஸ்லே நிறுவனம் கடந்த 16ம் தேதி அறிவித்தது.