தொடரும் நேதாஜி மர்மம்... ஏன் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வரவில்லை?
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பல்வேறு ரகசியக் கோப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் சந்தேகம் மட்டும் சற்றும் குறையாமல் நீண்டு கொண்டேதான் போகிறது. போஸ் விமான விபத்தில் உயிரிழந்தார், அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது என்று வெளியாகியுள்ள செய்தியில், அப்படி நடந்திருந்தால் ஏன் நேதாஜியின் அஸ்தியை ஒருபோதும் இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை.
நேற்று நேதாஜி தொடர்பான 100 கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நடவடிக்கைக்கு போஸ் குடும்பத்தினரும், ஆய்வாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்னும் வெளிவராமல் உள்ள பல முக்கிய கோப்புகள் வந்தால்தான் போஸ் தொடர்பான மர்மத்திற்கு நிரந்தரமாக விடை கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய மர்மம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்த செய்திதான். இதுவரை இதற்குத் தெளிவான விடை இல்லை என்பது வேதனைக்குரியது. வியப்புக்குரியதும் கூட.
ரகசியங்கள் அம்பலம்
இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய வீர மகன் போஸின் இறுதிக் காலம் குறித்த தகவல்களை மத்திய அரசு தொடர்ந்து ரகசியமாகவே வைத்து வருகிறது. இதுதொடர்பாக பல காலமாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்கு தற்போதுதான் மெதுவாக இறங்கி வந்துள்ளது மத்திய அரசு.
100 ஆவணங்கள் வெளியீடு
நேற்று முதல் போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது. நேற்று முதல் கட்டமாக 100 ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டது.
தயக்கம் காட்டிய அரசுகள்
இந்த ஆவணத்தில் ஒரு முக்கிய அம்சமாக போஸின் அஸ்தியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு பெரும் தயக்கம் காட்டியதை உணர்த்துகிறது. அது ஏன் என்று தெரியவில்லை.
கலகம் வரும் என அச்சம்
போஸின் அஸ்தியைக் கொண்டு வந்தால் உள்நாட்டில் பெரும் கலகம் ஏற்படும் என அரசு அஞ்சியதாக 70களில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணம் கூறுகிறது.
யாரும் நம்பவில்லை
மேலும் போஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதையும் அப்போது பலர் நம்பவில்லை என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போதைய இணைச் செயலாளர் என்.என்.ஜா எழுதிய ஆவணத்தில் போஸின் அஸ்தி என்று எதையாவது கொண்டு வந்தால் பிரச்சினை வரும் என்று தெரிவித்துள்ளார்.
போஸ் குடும்பம் அங்கீகரிக்கவில்லை
அதேபோல 1976ம் ஆண்டு உளவுத்துறை இணை இயக்குநர் டி.வி.தேஜேஷ்வர் எழுதிய கடிதத்திலும் இதேபோல தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸின் குடும்பத்தினர் இந்த அஸ்தியை அங்கீகரிக்கவில்லை என்றும், போஸ் நிறுவிய பார்வர்ட் பிளாக் கட்சியும் இதை ஏற்கவில்லை என்றும் ராஜேஷ்வர் தெரிவித்துள்ளார்.
அஸ்தி வந்தால் கெட்ட பெயர் வரும்
மேலும் போஸின் அஸ்தியைக் கொண்டு வந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும், போஸ் குறித்து தவறான செய்தியை அரசு பரப்ப முயல்வதாக கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொண்டு வர வேண்டாம்
மேலும் உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றுக்கு இடையிலான பல்வேறு கடிதப் போக்குவரத்துகளில் அஸ்தியைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்பதே பிரதானமாக இருந்துள்ளது.
ஜப்பான் கோவிலில் அஸ்தி
ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ளதா கூறப்படும் நேதாஜியின் அஸ்தியைக் கொண்டு வருவது தொடர்பான பிரச்சினையின்போதுதான் இந்தக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
நேரு எழுதிய கடிதம்
மேலும் முன்னாள் பிரதமர் நேரு, போஸ் குடும்பத்தினருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் போஸ் மரணமடைந்து விட்டதைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதற்கு தன்னிடம் நேரடி ஆதாரம் இல்லை என்றும் நேரு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகம் இல்லை
1995ம் ஆண்டு இடம் பெற்ற ஒரு அமைச்சரவைக் குறிப்பில், நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. 1945ம் ஆண்டு நடந்த விமான விபத்தில்தான் நேதாஜி உயிரிழந்தார் என்பதை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.