சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசால் கண்காணிக்கப்பட்ட நேதாஜி குடும்பம்: ஆவணத்தால் அம்பலம்
கொல்கத்தா: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தார், தொடர்ந்து, இந்திய உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள ஆவணங்களால் அம்பலமாகியுள்ளது.
போர்மோசா (தற்போது தாய்வான்) நாட்டில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த விமான விபத்தில், இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மரணித்தார் என்று அதே மாதம் 22ம் தேதி டோக்கியோ ரேடியோ ஒன்று அறிவிப்பு வெளியிட்டது. அதற்கிணங்க நேதாஜி அதன்பிறகு யாருடைய கண்களிலும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தை ஒரு கட்டுக்கதை என்று நேதாஜியின் தொண்டர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில், 1948 முதல் 1968ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் நேதாஜியின் குடும்பம் தொடர்ச்சியாக இந்திய உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்ட தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்ட 64 வகை ஆவணங்களில் இதுகுறித்த தகவல் உள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் டாக்டர்.லில்லி அபேக் என்பவர், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திரபோசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "1946ம் ஆண்டுவாக்கில், ஜப்பானை சேர்ந்த சில தகவல்கள், நேதாஜி உயிரோடு இருப்பதை உறுதி செய்கின்றன" என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் எங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள நல்ல ராஜாங்க நட்பை கருத்தில் கொண்டு, என்னால் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலவில்லை என்றும் அக்கடிதத்தில் லில்லி தெரிவிக்கிறார்.
1949ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி மீண்டும் லில்லி, நேதாஜி சகோதரருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், "உங்களுக்கு நேதாஜி பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா..? யுனைட்டட் பிரஸ் ஊடகம், நேதாஜி பெகிங்கில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது" என்ற தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த கடிதங்கள் அம்பலப்பட காரணம், நேதாஜியின் குடும்பத்தை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்ததுதான் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவிலுள்ள நேதாஜி ஆய்வு அமைப்பையும், உளவுத்துறை கண்காணித்துதான் வந்துள்ளது.
1965ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 20ம் தேதி, நேதாஜியின் உறவினர் சிசிர் குமார் போஸ் என்பவருக்கும், நேதாஜி பற்றி புத்தகம் எழுதிய ஜப்பானிய எழுத்தாளர் டட்சுவோ ஹயாசிடா என்பவருக்கும் நடுவே, கடித உரையாடல் நடந்துள்ளது.
"இந்திய வெளியுறவு துறை முன்னாள் அதிகாரியான சத்ய நாராயண் சின்ஹா, போர்முசா அரசு கூறும் தகவலில் பொய் இருப்பதாக கூறினார். போர்முசா அரசிடமுள்ள ஆவணங்கள் படி, விமான விபத்து 1944ம் ஆண்டு அக்டோபரில்தான் நடந்துள்ளதே தவிர, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டால், இந்த ஆவணங்களை போர்முசா அரசு தர தயாராக உள்ளது" என்று சிசிர் குமார் போஸ், ஜப்பான் எழுத்தாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த கடித ஆவணங்கள் அனைத்தும் இப்போது அம்பலமாகியுள்ளதன் மூலம், நேதாஜி குடும்பத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது உறுதியாகிறது.