போர்க்குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி பெயர் இல்லை... மத்திய அரசு ஆவணங்கள்
டெல்லி: மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் எதிலும் போர்க்குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
1945-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேதாஜி குறித்த தகவல்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி கடந்த ஜனவரி 23-ந் தேதி 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 50 ஆவணங்களும், ஏப்ரல் மாதம் மேலும் 25 ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன.
இந்நிலையில் மத்திய கலாசாரத் துறைச் செயலாளர் என்.கே.சின்ஹா, நேதாஜி தொடர்பான 25 ரகசிய ஆவணங்களை இணையதளத்தில் நேற்று வெளியிட்டார். அதில் 5 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தவை. 4 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தாலும், 16 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்தாலும் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்த ஆவணங்கள் 1968 ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது இப்போது வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.