நேதாஜி எங்கதான் போனாரு?... மிஸ்டர் மோடி புடின் கிட்ட கொஞ்சம் பேசுங்க.. உறவினர்கள் கோரிக்கை
கொல்கத்தா:சோவியத் யூனியனின் பிரதான பாதுகாப்பு அமைப்பான கேஜிபியின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி குறித்த ரகசிய கோப்புகளை வெளியிடும்படி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினிடம் வலியுறத்த வேண்டுமென நேதாஜியின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளதாக நேதாஜியின் பேரன் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரமர் மோடியை நானும், எனது சகோதரி மாதுரி போஸும் நாளை சந்திக்க உள்ளோம். அப்போது, நேதாஜியின் இறுதி நாட்கள் குறித்த மர்மங்களை அறிந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கோப்புகளை வெளியிடும்படி அதிபர் புடினிடம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கேட்டுக்கொள்ள வேண்டுமென என வலியுறுத்துவோம்.
கடந்த 1945-ல் தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் அவர் இறக்கவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர் சீனாவுக்கோ அல்லது சோவியத் யூனியனுக்கோ சென்றிருப்பார். எனவே ரஷ்யாவிடம் உள்ள ஆவணங்களை வெளியிட வேண்டும். இதன்மூலம் அவரது கடைசி காலம் பற்றி தெரிய வரும் என்று கூறினார்.
முன்னதாக, நேதாஜி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.