1948-ல் ஜெனரல் திம்மையாவையும் விகே மேனனையும் நேரு அவமானப்படுத்தினார்... பச்சை பொய் சொன்ன மோடி!
வரலாறுகளை திரித்து பிரதமர் மோடி பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
பெங்களூரு: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. 1948-ம் ஆண்டு ராணுவ தளபதி திம்மையாவையும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனனையும் பிரதமராக இருந்த நேரு அவமானப்படுத்தினார் என்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.
கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் பிறந்து ஆந்திராவில் செட்டிலான பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னடர் என மோடி புகழாரம் சூட்டினார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேபோல 1948-ல் பாகிஸ்தானை யுத்தத்தில் தோற்கடித்த பின் ஜெனரல் திம்மையாவையும் விகே மேனனையும் நேரு அவமானப்படுத்தினார் என்கிற மோடியின் பேச்சும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. வி கிருஷ்ணன் மேனன் 1953-ம் ஆண்டுதான் சென்னை மாகாணத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறார்.
1956-ல் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். 1957-ல் மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்று பின் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.
ஜெனரல் திம்மையாவைப் பொறுத்தவரை ராணுவ தளபதியாக 1957 முதல் 1961 வரை பதவி வகித்தார். ஆனால் பிரதமர் மோடியோ 1948-ம் ஆண்டு இருவரையும் பிரதமராக இருந்த நேரு அவமானப்படுத்தியதாக பேசியிருக்கிறார். இதை சுட்டிக்காட்டிதான் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.