2ஜி விவகாரத்தில் மன்மோகன்சிங்கை தவறாக வழிநடத்தவில்லை: டெல்லி கோர்ட்டில் ஆ. ராசா தரப்பு வாதம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தவில்லை; அனைத்து நடைமுறைகளும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட பிறகே செயல்படுத்தப்பட்டது என்று முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தரப்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் அண்மையில் தொடங்கியது. முதலாவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தரப்பு வாதம் தொடங்கியது.
டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் 2-வது நாளாக ஆ.ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு சர்மா நீதிமன்றத்தில் நேற்று முன்வைத்த வாதம்:
- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு நடவடிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராசா எதைத் தெரிவித்தாரோ, அதைத்தான் செயல்படுத்தினார்.
- 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி வரை விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை கிடைக்கும் என்று மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருந்தார். அதன்படியே அடுத்த ஓராண்டில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது.
- இந்த உண்மை நிலைக்கு மாறாக, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், போதிய அலைக்கற்றை இல்லை' என்ற குற்றச்சாட்டை சுமத்தியது. இதன் மூலம் தகுதி வாய்ந்த முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முயன்ற ராசாவின் நடவடிக்கைக்கு அந்த அமைப்பு முட்டுக்கட்டை போட சதி செய்தது.
- அலைக்கற்றை கோரி விண்ணப்பம் செய்ய அறிவிக்கப்பட்ட கடைசி நாளான 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ஐ முன்கூட்டியே நிர்ணயிக்க ராசா தன்னிச்சையாக முடிவு செய்ததாகவும் அந்த செயல் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும் சிபிஐ சுமத்திய குற்றச்சாட்டிலும் அடிப்படை இல்லை.
- அலைக்கற்றை கோரி ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பம் செய்தது. ஆனால், யூனிடெக் நிறுவனமோ 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24-இல்தான் விண்ணப்பம் செய்தது.
- யூனிடெக் நிறுவனத்துடன் ஸ்வான் டெலிகாம் கைகோர்த்து செயல்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது. ஆனால், 2007-ம் ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பம் செய்த நிறுவனத்துடன் சேர்ந்து எதற்காக ஸ்வான் டெலிகாம் செயல்பட வேண்டும்? இதன் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்குத்தானே போட்டியிடும் வாய்ப்பு குறையும்.
- இந்த யதார்த்த நிலையைக்கூட அறியாமல் சிபிஐ ஏதோ உள்நோக்கத்துடன் ராசா மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
- 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை தொடர்புடைய 51 விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளை சிபிஐ மறைத்துள்ளது. அவற்றையும் ஆராய்ந்தால் ராசா வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டது நிரூபணமாகும்.
இவ்வாறு மனுசர்மா வாதாடினார்.
இதைத் தொடர்ந்து ராசா தரப்பு வாதங்களை மேலும் தொடர அனுமதிக்கும்படி மனுசர்மா கோரினார். இதை ஏற்று வழக்கு விசாரணையை இன்றைக்கு சிறப்பு நீதிபதி ஷைனி ஒத்திவைத்தார்.
Former Telecom Minister A Raja on Thursday told a special court that he had never misled then PM Manmohan Singh on any issues relating to procedures to be followed for allocation of spectrum allocation.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தவில்லை; அனைத்து நடைமுறைகளும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட பிறகே செயல்படுத்தப்பட்டது என்று முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தரப்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.